You are here

செவ்வாய் தோஷம்..

செவ்வாய் தோஷம்..

jothidam
0
by aadhiguru

       செவ்வாய் தோஷம்( மங்கள தோஷம் ,குஜ தோஷம் )
       செவ்வாய் தோஷம் பற்றிய விரிவான தகவல்கள்) ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் ஒரு கொடூரமான கிரகமாகத்தான் கருதப்படுகிறது. அது பின்வரும் யாவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கும். அதாவது, ஆக்கிரமிப்பு, சண்டை குணம், ரத்தம் சிந்துதல், காயங்கள், கோபம், முரட்டுத்தனம், போரிடும் குணம் போன்றவையே  ஆகும்.
செவ்வாய் கிரகமானது மிக மோசமான பாதிப்பை, அது அமர்ந்த வீட்டுக்கும் மற்றும் அது தொடர்பு பெற்றிருக்கும் (பார்வை / சாரம் / இணைவு போன்றவைகள்) வீட்டிற்கும்  மேற்கூறிய குணநலன்களை / தரத்தை அளிக்கும். எந்தெந்த வீடுகளில் செவ்வாய் கிரகம் அமர்ந்துள்ளதோ அந்த இடத்திற்கு செவ்வாய் தோஷத்தை எந்த வகையிலாவது அளிக்கும் அல்லது திருமண பேரின்பத்தை அளிக்கும். எனவே தான் செவ்வாய்க்குத் திருமண பொருத்தத்தின் போது அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
செவ்வாய் தோஷம் / மங்கள தோஷம் / குஜ தோஷம் 
இந்த செவ்வாய் கிரகத்திற்கு, குஜன், மங்கள், அங்காரகன், செவ்வாய் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும். இந்த செவ்வாய் கிரகம் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், லக்கினத்தில் இருந்து 2, 4, 7, 8 அல்லது 12-ல் இருப்பின் அல்லது ராசியிலிருந்து 2, 4, 7, 8 அல்லது 12-ல் இருப்பின், அல்லது சுக்கிரன் நின்ற ராசியில் இருந்து 2, 4, 7, 8 அல்லது 12ல் இருப்பின், அதுவே செவ்வாய் தோஷம் அல்லது குஜ தோஷம் எனப்படும். ஒரு ஜாதகர் இப்படிப்பட்ட செவ்வாய் அமர்வு பெற்றிருப்பின் அந்த ஜாதகர் செவ்வாய் தோஷம் உடையவர் எனக் கருதப்படுவார். 
 
வெவ்வேறு வீடுகளில் செவ்வாய் தோஷம் அமையப்பெறுவதால், பெறுவதால் உண்டாகும் விளைவுகள் 2-ஆம் வீட்டில் ஏற்படும் செவ்வாய் தோஷம்
கடுமையான மற்றும் ஆக்கிரமிப்பு செய்யும் குணம் கொண்ட செவ்வாய் கிரகமானது, ஒருவரின் ஜனன காலத்தில் இரண்டாம் வீட்டில் இருப்பின், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துபவராயும், மற்றவர்களை ஆக்கிரமிப்பு செய்பவராயும் அந்த ஜாதகர் இருப்பார். இரண்டாம் வீடு என்பது தனது முதல் குடும்பத்தைப் பற்றிப்  பேசுவதால், அவர் தம் குடும்பத்தை விட்டு வெளியேற / தனிக்குடித்தனம் செல்ல அவர் விழைவார். இதன் பாதிப்பு, தோஷ அளவைப் பொருத்து மேலும் சில நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படலாம்.
4-ஆம் வீட்டில் ஏற்படும் செவ்வாய் தோஷம்
இந்த நான்காம் இடமானது, உறவினர்கள் மற்றும் வீட்டு வசதிகள் பற்றிக் கூறும். வீட்டு மகிழ்ச்சியை / சுகத்தை இந்த வீட்டில் ஏற்படும் செவ்வாய் தோஷம் கெடுத்துவிடும். வீட்டில் மகிழ்ச்சி அற்றவராய் இருக்க நேரிடும். 
7-ஆம் வீட்டில் ஏற்படும் செவ்வாய் தோஷம்
பாலியல் பங்குதாரரைப் (ஆண் எனில் அவர் தம் மனைவி அல்லது பெண் எனில் அவரின் கணவர்) பற்றியும், ஒரு ஜாதகரின் பாலியல் மகிழ்வு பற்றியும் குறிக்கும். அதோடு  ஒரு ஜாதகருக்கு, இங்குள்ள செவ்வாய், மிகவும் கடுமையாக, படுக்கை அறையில், பாலியல் விஷயத்தில் நடந்து கொள்வார் எனலாம்.
  
8-ஆம் வீட்டில் ஏற்படும் செவ்வாய் தோஷம்
இந்த வீட்டால் திருமண வாழ்வின் நீட்சியைப் பற்றிக் குறிக்கும். கெடுதல் பயக்கும் செவ்வாய் இங்கு இருப்பின், தம்பதியர் இருவருள் ஒருவருக்கு ஏதேனும் ஒரு நோய் தந்து,  திருமணப் பந்தத்தை முறித்து விடும் அல்லது இறப்பைத் தந்துவிடும்.   
12-ஆம் வீட்டில் ஏற்படும் செவ்வாய் தோஷம்
படுக்கை அறை சுகத்தைப் பற்றிக் குறிக்கும் வீடு இது. செவ்வாய் இந்த வீட்டில் இருப்பின் படுக்கை சந்தோஷத்தை ஏதேனும் ஒரு காரணத்தால் குறைத்துவிடும். அது  இருவருள் ஒருவருக்கு, தேவையற்ற அதிக பிரயாணமாகக்கூட இருக்கலாம்.
செவ்வாய் தோஷத்தின் தீவிரம்
மேற்கூறிய இடங்களில் செவ்வாய் தோஷமானது லக்கினத்திலிருந்து பார்க்கும் போது முழுமையானதாகவும், சந்திரன் நின்ற வீட்டிலிருந்து பார்க்கும் போது பாதி (1/2) தோஷத்தையும் மற்றும் சுக்கிரனிலிருந்து பார்க்கும்போது கால் பங்கு(1/4) தோஷத்தையும் அளிக்கும். அதே போல் ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 8ஆம் வீட்டில் மற்றும் 7ம் வீட்டில் இருப்பின் பாதகமான விளைவுகளையே தரக்கூடியதாக இருக்கும். 2, 4, 12ஆம் இடங்கள் அவ்வளவு கெடுதி செய்யக்கூடியதாக இருக்காது. ஆனால் இது திருமண வாழ்வில் இங்குள்ள செவ்வாய் சில பிரச்னைகளை தந்தே தீரும். 8ஆம் வீட்டில் அதிக பாதிப்பையும் அதற்கடுத்து 7ஆம் வீட்டிற்கும் அதன்பிறகு தான் 2, 4, 12-ஆம் வீடுகளுக்குமாக தொடர்ச்சியாகப் பாதிப்பை அளிக்கும் எனக்கருத வேண்டும்.  
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள்
பின்வரும் கிரக அமைப்புகளால் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 2, 4, 7, 8 மற்றும் 12-ஆம் வீட்டிலிருந்தாலும், விதிவிலக்காகி செவ்வாய் தோஷம் இல்லாமல் செய்துவிடும். அவற்றைப் பற்றி விளக்கமாக இப்போது, காண்போம். 
1. மிதுனம் மற்றும் கன்னி இரண்டாம் வீடானால், செவ்வாய் தோஷம் இல்லை. 
2. மேஷம் மற்றும் விருச்சிகம் நான்காம் வீடானால், செவ்வாய் தோஷம் இல்லை. 
3. கடகம் மற்றும் மகரம் ஏழாம் வீடானால், செவ்வாய் தோஷம் இல்லை. 
4. தனுசு மற்றும் மீனம் எட்டாம் வீடானால், செவ்வாய் தோஷம் இல்லை. 
5. ரிஷபம் மற்றும் துலாம்  பன்னிரெண்டாம் வீடானால், செவ்வாய் தோஷம் இல்லை. 
6. கடகம், சிம்மம் இந்த இரண்டு லக்கினகாரர்களுக்கும், செவ்வாய் யோக காரகர் ஆவதால், செவ்வாய் தோஷம் இல்லை. 
7. செவ்வாய் தனது நண்பர்களான சூரியன், சந்திரன் மற்றும் குரு வீடுகளான கடகம், சிம்மம், தனுசு மற்றும் மீனத்தில் இருப்பின், செவ்வாய் தோஷம் இல்லை.
8. செவ்வாய், தனது சொந்த வீடுகளான மேஷம் மற்றும் விருச்சிகத்தில் இருப்பின், செவ்வாய் தோஷம் இல்லை. 
9. செவ்வாய் வக்கிரம் அடைந்திருப்பின் தோஷம் இல்லை.
10. செவ்வாய் அமர்ந்துள்ள வீட்டு அதிபதி கேந்திர (1, 4, 7, 10) வீடுகளிலும் மற்றும் திரிகோண (1, 5, 9) வீடுகளிலும் அமர்ந்திருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை. இவை ஒரு சிலவே, மேலும் திருமணப் பொருத்தத்தின் போது நன்கு ஆராய்ந்து திருமணம் செய்விப்பதால், திருமணப் பந்தம் நீண்டு நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகம் தேவை இல்லை. 
செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பொதுவான விளைவுகள்
1. திருமணம் கால தாமதம் ஏற்படும். 
2. தம்பதியினர் இடையே சண்டை மற்றும் குடும்ப அங்கத்தினருடன் கருத்து வேறுபாடு.
3. தம்பதியினருள் ஒருவருக்குக் கடுமையான உடல் நிலை சீர் குலைவு.
4. குடும்பத்துக்குள் பணப் பற்றாக்குறை அல்லது பொருளாதார பிரச்சினைகள். 
5. சமூகத்தில் அவப்பெயர். 
6. விவாகரத்து அல்லது சீக்கிரம் பெண்ணாக இருப்பின் விதவை ஆவது, ஆணாக இருப்பின் மனைவியை இழப்பது. 
செவ்வாய் தோஷம் கொண்ட பெண்ணின் சுபாவங்கள் 
* திருமண வயதில் சரியான வரன் அமையாதிருத்தல்.
* சமூகத்தில் தான் எந்த தவறும் செய்யாத போதும், அவப்பெயர் சம்பாதித்தல். 
* கணவன் / மனைவியிடத்தில் சண்டை இடுதல் அல்லது குடும்ப அங்கத்தினருடன் மற்றும் உடன் பிறப்புகளுடன் சண்டை போடுவதைக் காணமுடிகிறது. 
* உடலில் காயம் ஏற்படுதல் அல்லது உடல் நலக்கோளாறு ஏற்படுதல், இவற்றில் நிச்சயம் உதிரம் சிந்தவேண்டியது தவிர்க்க முடியாததாக இருக்கும்; ஈறுகளில் ரத்தக்கசிவு, மாத விடாய் பிரச்சினைகள் போன்றவை இருக்கும்.
* வயது பார்க்காமல், உறவு முறை பார்க்காமல் ஆணிடம் கவர்ச்சி ஏற்பட்டு அதனால் ஏற்படும் தொல்லைகளை அனுபவித்தல் போன்றவை ஏற்படும். ஒரே ஒரு நேர்மறையானதைச் சொல்லவேண்டும் எனில், செவ்வாய் தோஷம் கொண்ட பெண்கள், வெளியில் செல்ல  துணிச்சலானவர்களாகவும், எந்த காரியத்தையும் செய்து முடிப்பவர்களாகவும் இருப்பர். 
செவ்வாய் தோஷம் கொண்ட  ஆணின் சுபாவங்கள்
* திருமணம் கால தாமதம் ஆகுதல். 
* இணக்கமற்ற ஒரு வாழ்க்கைத் துணையை அடைந்து அவர்களோடு சண்டை இட்டு, நீதிமன்ற வழக்குகளில் சென்று முடிவடைதல். 
* எப்பொழுதும் பாலியலில் தூண்டப்பட்டு சதா சர்வ காலமும் அதே நினைவில், திருமண வாழ்வில் திருப்தி அடையாமல் இருத்தல். 
* அதிகமாக இப்படிப்பட்ட ஆண்கள், அகால விந்து வெளியேறும் பிரச்னையை சந்திப்பவர்கள் ஆவார்கள்.
செவ்வாய் தோஷம் திருமணத்தின் போது..
ஒருவருக்கு (ஆண் / பெண் ) செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் இருப்பின் அவரின் திருமணத்தால்   பங்குதாரர் ஆகும் (லைப் பார்ட்னர் ) மற்றவர்க்கும் அவ்வாறு இருத்தல் நல்லது. அல்லது இருவருக்கும் செவ்வாய் தோஷம் இல்லாது இருத்தல் நல்லது. அப்படி இன்றி, ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றவருக்கு செவ்வாய் தோஷம் இல்லாமல் இருந்தால், அது திருமண வாழ்வில் பிரிவினையையோ அல்லது ஒருவரின் இறப்பையோ சந்திக்க நேரிடும். பொதுவாக பெண்ணின் செவ்வாய் தோஷம் , ஆணின்  செவ்வாய் தோஷத்தை விட சிறிது சதவீதமாவது குறைவாக இருப்பது நல்லது.  
செவ்வாய் தோஷத்திற்கான பரிந்துரைகள்
இந்த செவ்வாய் தோஷமானது, இரண்டாம் திருமணத்திற்கும், விதவை ஆண் / பெண், மற்றும் விவாகரத்து ஆனவர்களுக்கும் பிரச்னை ஏதும் தராது. அதே போல் பெண்ணிற்கு 28 வயதிற்குப் பிறகும், (ஏனெனில் செவ்வாய்க்கு முதிர்ச்சி வயது - 28), காதல் திருமணத்திற்கும், மதம் மாறி திருமணம் செய்பவர்களுக்கும், மற்றும் பெண்ணின் திருமணத்திற்கு முன்னரே செவ்வாய் தசை முடிவுற்றிருந்தாலும் அல்லது 45 வயதுக்கு பிறகு செவ்வாய் தசை வருவது போல் இருந்தாலும், செவ்வாய் தோஷத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
அனுபவத்தின் பேரில் சொல்வதானால், செவ்வாய் தோஷம் கொண்ட ஆண், பெண் இருவருக்கும் திருமணம் செய்வதே உசிதம் எனலாம். அதோடு, ஒரு பெண்ணிற்கு 7 அல்லது 8 இல் செவ்வாய் இருப்பின் அதே போன்று ஆணுக்கும் 7 அல்லது 8இல் செவ்வாய் இருப்பவருக்கே திருமணம் செய்விப்பது மிக நல்லது. அல்லது 2, 4, 12இல் ஆவது செவ்வாய் இருப்பின் நல்லது

 

Comments

Add new comment